Thursday, April 20, 2006

செப்டம்பர் 11

காணி நிலம் கேட்டாய் பாரதி
உன் பிறந்த நாளிலேயே கொடுத்தான்
பின் லேடன்
வெறும் காணி நிலம் மட்டும்

Monday, April 10, 2006

ஒரு காமிராவும் சில டைரிப்பக்கங்களும்

முரளியின் டைரி 12/3/2001


இன்று எங்கள் ஆபீஸில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. புரியவே இல்லை. எதற்காக இதை கொண்டாடுகிறார்கள் என்று. கொண்டாடுகிறோம் என்பதை தெரிவிக்க அந்த கூத்துக்களை புகைப்படம் வேறு எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் என்பது நிஜங்கள் நினைவுகளான பின் நினைத்துப் பார்க்க உதவும் நினைவுகள். ஆனால், இங்கே எடுக்கப் படுபவை நிஜங்களா ? சாய்ந்து கொண்டு, சிரித்துக்கொண்டு, வித்தியாசம் என நினைத்து முட்டாள் தனமான செய்கைகள் செய்து கொண்டு, கேமிராவிற்கு பயந்து அது புகைக்கும் வரை பவ்யமாக பணிந்து நின்று கொண்டிருப்பது என இவர்கள் செய்யும் அனைத்துமே முட்டாள் தனமானவையே.

முரளியின் டைரி 14/3/2001


இந்த விளையாட்டுப் போட்டிகளில், அதுவும் முக்கியமாக கிரிக்கெட் போட்டிகளில் புகைப்படங்கள் எடுப்பது என்பது அவசியம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்றைய செய்தித்தாளை பார்த்த பின்னே அதன் உண்மையான அர்த்தம் விளங்கிற்று. மூன்று வாரத்திற்கு முன்பு நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விளையாட்டு வீரனின் புகைப்படம் (அவர் பயிற்சியில் இருந்த போது). அவர் அற்புதமாக விளையாடியது உண்மையென்றாலும் அவரது புகைப்படம் அங்கே ரொம்ப அவசியமா?
இது இவ்வளவு முட்டாள்தனம் என தெரிந்தும் சாகருக்கு இன்று ஒரு காமிரா வாங்கி கொடுத்தேன்.


சாகரின் டைரி 11/3/2001


இன்று முரளி என் காமிராவை தொலைத்து விட்டான்


சாகரின் டைரி 14/3/2001


எவ்வளவு வற்புறுத்தியும் முரளி கேட்காமல் இன்று ஒரு புது காமிரா வாங்கி கொடுத்தான்.

என்னை கதை எழுத தூண்டிய (உசுப்பேத்திய) அன்பு நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது ஆசைப்படியே கதை சில டைரிப்பக்கஙள் மூலமாக.

Friday, April 07, 2006

தமிழன்

கூட்ட நெரிசலில்,
உச்சி வெயிலில்,
இரு கைகளில், தோள்களில்,
கழுத்தினில்
பாரம் சுமந்த கூலி கத்தினான்


"வழி வழி"

மறுமலர்ச்சி

அவமானத்தாலும்,
நண்பனின் அறிவுரையாலும்,
குடும்ப சூழ்நிலையாலும்,
இறந்த என் காதல்துளிர்விடுகிறது...
சாலையோர கடைகளில் உன் பெயர் கொண்ட
பெயர் பலகைகளை
பார்க்கும் போது.

Wednesday, April 05, 2006

விளையாட்டு

"எனது மகனை கொல்ல போகிறேன்".

முதலில் அந்த மின்னஞ்சலை மற்ற விளையாட்டு (கிறுக்கு ) அஞ்சலாக ஒதுக்கி விட நினைத்தாலும், மனம் ஒப்பாமல் அதனை குற்றப் பிரிவு அதிகாரியின் பார்வைக்கு அனுப்பினார் அந்த அதிகாரி.வழக்கமாக செய்ய வேண்டிய கையெழுத்துகள் பறிமாற்றத்துக்கு பின் அந்த அஞ்சல் அனுப்பப்பட்ட IP ADDRESS பின் தொடரப்பட்டு, அவரது அடையாளங்கள் ஆராயப்பட்டு, அவருக்கு ஒரு மகன் இருப்பதும், அவருக்கு மனநிலை சரியில்லை என்பதும் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் ஆனது.

அவரது வீட்டின் சோதனையில் அவரை பற்றி கேள்வி பட்டவை உருதியாயின. ஆனால் அவரும், அவரது மகனும் வீட்டில் இல்லை.சில பல போலீஸின் சாதுர்யத்தால், அந்த மறைவிடம் கண்டு பிடிக்கப்பட்டது.

வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது அங்கே அந்த தந்தையாகபட்ட மனிதர் உட்கார்ந்து கொண்டு ஏதோ படித்துக்கொண்டிருந்தார். போலீஸை பார்த்தவுடன் பதறாமல் எழுந்தார். பிறகு, "நான் சொல்ல வில்லையா மோகன்? போலீஸ் எப்படியும் நம்மை கண்டு பிடித்து விடுவார்கள். இதோ அவர்கள் வந்து விட்டார்கள்." என்றபடி அடுத்த அறைக்குள் சென்றார்.

போலீஸ் மெதுவாக அந்த அறையை அடைந்த போது "போதும் மோகன் ! இது என்ன விளையாட்டு ? நீ தான் தோற்று விட்டாய் அல்லவா? பிறகு ஏன் இன்னும் எழ மறுக்கிறாய்? பாருங்கள் Sir ! நாங்கள் சும்மா தான் விளையாடினோம்." என்றபடி யாரையோ எழுப்ப முயன்று கொண்டிருந்தார்.

எட்டி பார்த்த போலீஸ் அதிகாரியின் கண்களில் அந்த சிறுவனின் பிணம் தெரிந்தது.